வெற்றி நிரப்பு

——————

நெஞ்சே எழு

வீதி சொல்லும் விதியென்று…

நம்பாதே !

 

முடிச்சை அவிழ்த்தால்

முடியாத வினையில்லை

முயன்று பார்!

 

பாறைகளில் மோதி

காயப்படக் கண்ணாடியல்ல,

 நீ காற்று!

பட்டுத் தெரிந்து, புகுந்து புறப்படு.

உனக்கேது வேலி !

 

இனி நடக்காது

என்னும் 

சொல்லை செல்களிலிருந்து

சுழற்றி எறி…

 

பாவக்காய் கூட கசந்து

பெருமை பெறும்..சுய

பரிதாபம், பச்சாதாபம் 

என்றும் பரிசு பெறாது! 

 

தீயைத் தொடு , சுடட்டும்..

பனிப் பாறையாகாதே

சுட்ட செங்கல் தான்

வீடு கட்ட உதவும்…

 

என்னை விட 

உயர்ந்தவன்

யாருமில்லையெனும் சில 

தென்னைகள் கண்டு 

தேம்பிடாதே ..! 

 

முறித்தாலும் வளைகின்ற 

மூங்கிலாய் இரு.. 

உள் வாங்கும்

மூச்சை குழல் இசையாக்கு ! 

 

நேற்று நடந்த 

நல்லதை நினை

இன்று இயங்க 

தயார்படுத்து உனை 

நாளை வரட்டும்

நம்பிக்கையில் நனை !

 

வெற்றிடத்தை உழைத்து,

வியர்வையால் நிரப்பு..

வெற்றி இடம் உனக்கே!

 

வியாழன் உதிக்க,

விடியட்டும் உள்ளம்!

 

நதிநேசன்