காதல்…

பதின்மங்கள் படிக்கும்
பள்ளிப் பாடம்..

கண்கள் கதகளி
கற்கும் கல்லூரி…

இமைகளால் சிறகடிக்கும்
இளமைப் பறவை..

இருபதுகளில் ஏற்படும்
❤இதய நோய்..

ஹார்மோன்கள் இசைக்கும்
ஹார்மோனியம்…

உடலுக்குள் உள்ளத்தின்
உல்லால்லா நடனம்..

தொடத்தொடத் தள்ளிப் போகும்
தொடுவான் வண்ணம்…

தூங்காத விழிகளிலே
துடிக்கின்ற கனவு…

மனப்பூக்கள் கை கோர்த்து
மணக்கின்ற மாலை..

உள்ளங்கள் உடலுக்குள்
உறைகின்ற காலை..

முப்பதிலும், மூப்பதிலும்
முடியாத ஆசை…

நாற்பதிலும் காதல், முடி
நரைக்காத மீசை..

வாசம் போன மலர்களையும்
வருடி விடும் காற்று…காதல்,

வயதாக, வயதாக
வாஞ்சை மிகும் ஊற்று…

கைப்பிடிக்க இளம் வயதில்
மெய்யால் கொண்ட மோகம்..

கைப்பிடித்தெழும் எழுபதிலும்
மெய்யாகும் ராகம்…

காற்றுள்ள நாள் வரையில்
காதலிங்கு உயிர் வாழும்..

ஆதலினால் காதலிப்பீர்
அன்றாடம், இனி நாளும்…